தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனம் கேபிள் டிவி ஒளிபரப்பு மட்டுமல்லாமல் ஆதார் மையங்கள் மற்றும் இ சேவை மையங்களையும் நடத்தி வருகின்றது. ஆதார் கார்டில் இருக்கும் பல்வேறு திருத்தங்களுக்கு ஆதார் மையங்களும் வருவாய் துறை பதிவு துறை சார்ந்த சான்றிதழ்களுக்கு இ சேவை மையங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக, பொது மக்களிடம் இருந்து சேவை கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட்டு வருகின்றன. தற்போது, இதில் பணமில்லா பரிவர்த்தனையை அரசு அமல்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 14 அரசு அலுவலகங்களில் கேபிள் நிறுவனத்தின் சார்பாக ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன.
இந்த மையங்களில் சென்ற மூன்று நாட்களாக பண பரிவர்த்தனை முறையானது டிஜிட்டல் முறையில் நடந்து வருகின்றது. இதற்காக, அந்த மையங்களுக்கு பாயிண்ட் ஆப் சேல் மெஷின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தியோ அல்லது ஸ்கேனர், க்யூஆர் கோடுகளை பயன்படுத்தியோ கட்டண தொகையை செலுத்த முடியும். இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை தெரியாதவர்கள் வழக்கம் போல ரொக்கமாக தொகையை செலுத்தலாம்.