டெல்லி: கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கறேன் என குறிப்பிட்டுள்ளார். துருக்கியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தென்கிழக்கு துருக்கியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு துருக்கியில் உள்ள கக்ராமன்ராம்ஸ் நகரத்திற்கு அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் திறன் ரிக்டர் அளவில் 7.9ஆக பதிவாகியுள்ளது. ஒரு நிமிடம் நீடித்த நிலநடுக்கத்தால் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 230 பேர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இத்தாலி சுனாமி பேரலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.