இந்தாண்டு பட்ஜெட்டிற்கு பதிலாக கடந்தாண்டு பட்ஜெட்டை வாசித்த ராஜஸ்தான் முதல்வர்!

இன்று நடந்த ராஜஸ்தான் சட்டமன்ற கூட்டத்தில், இந்த ஆண்டு பட்ஜெட்டிற்கு பதிலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாசித்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்திற்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான அசோக் கெலாட், இன்றைய தினம் தாக்கல் செய்தார். அப்போது உரை தொடங்கிய முதல் 10 நிமிடங்களுக்கு, யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு பட்ஜெட்டையே வாசித்தார் அசோக் கெலாட். இதனையடுத்து அருகில் இருந்த தலைமை கொறடா மகேஷ் ஜோசி, முதல்வரிடம் அவரின் தவறை சுட்டிக்காட்டினார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட முதல்வர், அதிகாரிகளை வரவழைத்து இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். இதனை எதிர்பாராத எதிர்க்கட்சியனரான பாஜகவினர் சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவை ஒத்திவைக்கப்பட்டு பிறகு அரைமணி நேரம் கழித்து பட்ஜெட் தாக்கல் மீண்டும் நடைபெற்றது.
image
முதல்வரின் இந்த செயலை கடுமையாக சாடியுள்ள பாஜக மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே, “இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கும் கடந்த ஆண்டு பட்ஜெட்டுக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒரு முதல்வர், மாநிலத்தை வழிநடத்துகிறார் என்றால், இந்த மாநிலம் எப்படி பாதுகாப்பாக இருக்கும்?” என கேள்வி எழுப்பி உள்ளார். இதையொட்டி பல எதிர்க்கட்சி தலைவர்களும் முதல்வரின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து வௌர்கின்றனர்.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. வரப்போகும் தேர்தலையொட்டி, இந்த பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகளை அள்ளித்தெளித்துள்ளது அசோக் கெலாட்டின் ஆட்சி. அதுபற்றிய விவரங்கள்: ராஜஸ்தான்: சட்டப்பேரவை தேர்தலையொட்டி பட்ஜெட்டில் அறிவிப்புகளை அள்ளித் தெளித்த காங்கிரஸ்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.