ஏர் இந்தியா நிறுவனம், கோவையிலிருந்து மும்பைக்கு புதிய விமானத்தை இன்று முதல் இயக்க உள்ளது. மும்பையில் காலை 6:30க்கு புறப்படும் இந்த விமானம், கோவைக்கு 8:20க்கு வரும். காலை 9:00 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு, 10:50க்கு மும்பை சென்றடையும்….
மும்பையில் இருந்து ரியாத்துக்கு 12:35 மணி; லண்டனுக்கு மதியம் 2:15 மணி; அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு மதியம் 2:30 மணி; துபாய்க்கு மாலை 4:30 மணிக்கு ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால், கோவையிலிருந்தே இந்த விமானங்களுக்கு முன்பதிவு செய்து, மும்பை சென்று, அங்கு விமானம் மாறி, வெளிநாடுகளுக்கு பயணிக்கலாம்.
பொருட்களை இங்கிருந்தே நேரடியாக அனுப்பி விடலாம்; வெளிநாடு செல்வதற்கான ‘போர்டிங் பாஸ்’சான பயணச் சீட்டையும் இங்கேயே பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட நான்கு நாடுகளிலிருந்து மட்டுமின்றி, பாரீஸ், வார்ஷா, நைரோபி, குவைத், தோகா, மஸ்கட் மற்றும் இஸ்தான்புல் ஆகிய வெளிநாட்டு நகரங்களிலிருந்து, கோவைக்கு வருவதற்கும், இந்த ஏர் இந்தியா விமான சேவை பேருதவியாக இருக்கும்.
ஏற்கனவே கோவை மும்பை இடையே இன்டிகோ, விஸ்டாரா என மூன்று விமானங்கள் சேவை இருந்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக விமான சேவை துவங்க உள்ளது. கோவையிலிருந்து வியாபார ரீதியாகவும், வெளிநாடு மருத்துவத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் விமான சேவை துவங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.