
ஆகஸ்டில் விஜய் 68வது படத்தை தொடங்கும் வெங்கட் பிரபு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. காஷ்மீரில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அதன் பிறகு சென்னை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. அடுத்தபடியாக சென்னை மற்றும் தலக்கோணத்தில் மொத்தம் ஒருவாரம் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதோடு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று கூறுகிறார்கள். அதையடுத்து இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் விஜய்யின் 68வது படத்தை இயக்க இருக்கும் வெங்கட் பிரபு, அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறார். அடுத்த மாதத்தோடு கதை திரைக்கதை பணிகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் விஜய் நடிக்கும் 68 வது படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக வெங்கட் பிரபு வட்டாரத்தில் தகவல் வெளியாகியிருக்கிறது.