`உறியடி’ விஜய்குமார் நடிப்பில் உருவாகியிருக்கிறது, `ஃபைட் கிளப்’ திரைப்படம்.
இதனை, ‘உறியடி’ திரைப்படத்தின் துணை இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கியிருக்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனத்தின் மூலம் இத்திரைப்படத்தை வழங்குகிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ‘உறியடி’ விஜய்குமார் உட்படப் படக்குழுவினர் சிலர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்வில் பேசிய இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா, “எங்களுடைய ரீல் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை 2019-ல ஆரம்பிச்சோம். விஜய்குமார்கூட சேர்ந்து வேலைப் பார்த்ததுல ரொம்பவே சந்தோஷம். விஜய்குமார் ஒரு படம் பண்ணும் போது நிச்சயம் அதுல சில விஷயங்கள் இருக்கும்ன்னு சொல்லி, லோகேஷ் கனகராஜே நான் இதை வழங்குறேன்னு சொன்னார். இந்தப் படத்தை ‘லியோ’ படப்பிடிப்பு நடந்துட்டு இருக்கும் போது வந்து பார்த்தார். லோகேஷ் மட்டுமல்ல, ‘லியோ’ படக்குழு பலரும் வந்து ‘ஃபைட் கிளப்’ படத்தைப் பார்த்தாங்க. இந்தத் திரைப்படத்தின் உலகம் நிச்சயமாக உங்களை ஏமாற்றாது” என்றார்.

இதனையடுத்து வந்து பேசிய இத்திரைப்படத்தின் கதாநாயகி மோனிஷா, “இத்திரைப்படம் பல சினிமா காதலர்களால சேர்ந்து உருவாகியிருக்கு. எனக்குத் திரைப்பட இயக்குநராகனும்னுதான் ஆசை. மலையாளத்துல ரெண்டு படங்களுக்குத் துணை இயக்குநராக வேலைப் பார்த்திருக்கேன். ‘உறியடி’ திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். விஜய்குமாரும் எனக்கு எப்பவும் ரொம்ப உறுதுணையாக இருப்பார். அவர்கிட்ட இருந்து பல விஷயங்கள் நான் கத்துக்கிட்டேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கேரளாவில் அதிகப்படியான ரசிகர்கள் இருக்காங்க. நானும் ஒரு ரசிகையாக ‘லியோ’ படத்தோட முதல் காட்சி பார்த்தேன்” எனப் பேசி முடித்தார்.
இதனைத் தொடர்ந்து வந்து பேசிய ‘உறியடி’ விஜய்குமார், “‘ஃபைட் கிளப்’ – இந்தப் படத்துக்குத் தலைப்பு ரொம்ப இன்டென்ஸாக இருந்தா நல்ல இருக்கும்ன்னு யோசிச்சோம். டேவிட் ஃபின்சரோட ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக். இந்தப் படத்துக்கு அதே டைட்டிலை வச்சு ஒரு ட்ரிபூட் கொடுக்கலாம்னு பிளான் பண்ணோம். அந்தப் பெயரை நாங்க கெடுத்திடமாட்டோம்ன்னு நினைக்கிறோம். இந்தப் படத்தை முடிச்சிட்டு இயக்குநர் லோகேஷ்கிட்ட காமிச்சோம். ‘லியோ’ படத்தோட ஷூட்டிங் இடைவெளில வந்து படத்தைப் பார்த்துட்டு போனார் இந்தியாவோட ‘Most wanted director’ லோகேஷ்.

அவை நாகரிகத்துக்காக மரியாதையாகப் பேசுனேன். நட்புல ஒருமையும் அழகுதான். நாங்க 2014-ல படம் பண்ணலாம்ன்னு பேசி இப்போதான் பண்ணியிருக்கோம். என்கிட்ட ஒரு கல்லூரி பத்தின கதையை 40 நிமிடங்கள் சொல்லியிருக்கான். இத்திரைப்படத்தின் இயக்குநர் அப்பாஸை நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு. இந்தப் படத்துல யாரும் தொழிலாக நினைச்சு வேலைப் பார்க்கல.
மக்களுக்குப் பிடிக்கனும்ன்னு சில விஷயங்கள் பார்த்து பார்த்து பண்ணியிருக்கோம். இந்தப் படத்துல நிறைய இளம் திறமைசாலிகள் சேர்ந்து வேலை பார்த்திருக்காங்க. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் கூகுள்ல வேலை பார்க்கிறார். இரண்டு வேலைகளையும் அவர் சரியாகக் கவனிச்சுக்கிட்டார். அப்பாஸுக்கு சினிமாவை தவிர வேறு எதுவுமே தெரியாது. சினிமாமேல பைத்தியம் அவன். அவனுக்கு குரு எப்பவும் மணிரத்னம் சார்தான். அவன் கைலகூட பச்சை குத்திருப்பான்” எனப் பேசியவர் இயக்குநர் அப்பாஸ் குறித்துப் பேசுகையில் கண்கலங்கினார்.

இறுதியாக வந்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இந்த மேடை எனக்கு ‘மாநகரம்’ திரைப்படத்துக்கான மேடை மாதிரிதான். புதிய தொடக்கம்… என் பெயரும் விஜய்குமார் பெயரும் ஒரே படத்துல வரணும்னு 2017-ல இருந்து பேசிட்டு இருக்கோம். அது இப்போ நடந்துருக்கு. அவன் ஒரு டைரக்டர், நடிகர், நண்பன் என்பதையெல்லாம் தாண்டி அவன் ரொம்ப நேர்மையானவன். இந்த படம் நான் ‘ஃபைட் கிளப்’ படக்குழுவுக்குச் செய்யுற நல்லதாகப் பார்க்கல. என் கம்பெனிக்கு நான் செய்யுற நல்லதாகப் பார்க்கிறேன். நீங்க கொடுத்த வரவேற்புனாலதான் இங்க நிக்குறேன். நாங்க ‘களம்’ குறும்படம் பண்ணி அதை சில தயாரிப்பாளர்களுக்கு காமிச்சிருக்கோம். அது மூலமாகத்தான் ‘மாநகரம்’ திரைப்படம் நடந்தது. அந்த குறும்படம் பண்றதுக்கு என் நண்பர்கள்தான் எனக்குப் பணம் கொடுத்து உதவி பண்ணாங்க. இந்த ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனத்தின் மூலமாக என் நண்பர்கள் பலருக்கு உதவி செய்யணும்ன்னு நினைக்கிறேன். அதுதான் இந்த நிறுவனத்தோட குறிக்கோள். டைரக்ஷன்லயே நல்லா சம்பாதிக்குறேன். இதுல சம்பாதிக்குறது புதிய திறமைசாலிகளுக்கு!” எனப் பேசி முடித்தார்.