புதுடெல்லி: விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம், அரசு திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு அதிக இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு பஞ்சாப்,ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி பேரணியாக வந்தனர். அவர்கள் பஞ்சாப்எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இணைய சேவை தடை செய்யப்பட்டது. தடையை மீறி போராடிய விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒரு விவசாயி உயிரிழந்ததோடு, பல விவசாயிகள் காயமடைந்தனர்.
இந்நிலையில், கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து மார்ச் 10-ம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இது குறித்து விவசாயிகள் அமைப்பு தலைவர் ஜக்ஜித் சிங் கூறியதாவது:
டெல்லிக்கு பேரணி செல்லும் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை. எல்லையில் எங்கள் பலத்தை அதிகரிக்க முடிவுசெய்துள்ளோம். மார்ச் 6-ம் தேதி விவசாயிகள் ரயில், பேருந்து, விமானம் மூலம் டெல்லிக்கு வருவார்கள்.
மார்ச் 10-ம் தேதி நாடு முழுவதும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.