`62 ஆண்டுகள் ஒரே இடத்தில் வேலை! – பாலு மகேந்திராவுக்குப் பிடித்த நாக்ரா ஆபரேட்டர் ALS அப்பாசாமி!

கவிஞர் கண்ணதாசனின் சகோதரரும், ‘கந்தன் கருணை’ , ‘சாந்தி’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த பழம்பெரும் சினிமா தயாரிப்பாளர் A.L சீனிவாசன்.

அவரின் ‘சாரதா’ ஸ்டூடியோவில் 1962ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்து 62 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த ALS அப்பாசாமி கடந்த மே முதல் தேதி அன்று வயது முதிர்வின் காரணமாகக் காலமானார்.

தங்களிடம் வேலை பார்த்த ஒரு ஊழியர்தானே என்று கருதாமல் ‘ALS அப்பாசாமி’ என்றே அவரையும் அழைக்கும் ALS குடும்பத்தினர், மறைந்த அப்பாசாமியின் புகைப்படத்தைத் தங்கள் வீட்டில் மாட்டி அவருக்கு மரியாதை செய்துள்ளனர். அப்பாசாமி குறித்து AL சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பனிடம் பேசினோம்.

“ எங்க ஸ்டூடியோவுல ‘நாக்ரா’ சவுண்ட் ரெகார்டர் இருந்தது. ஸ்டூடியோவுக்குள் ரெக்கார்ட் செய்யப்படுகிற பாடல்களை டேப்பில் எடுத்துகிட்டுப் போய் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ, ஹீரோயின் அந்தப் பாட்டுக்கு ஏத்தபடி வாயசைக்க வைக்கிற இடத்துல பயன்படுத்தபடுகிற கருவிதான் இந்த ‘நாக்ரா’. ரொம்ப காஸ்ட்லியானது. இந்த ‘நாக்ரா’ ஆப்ரேட்டிங் வேலைக்கு வந்தவர்தான் அப்பாசாமி. வேலையில அவ்வளவு துல்லியம் எந்தளவுண்ணா, இயக்குநர் பாலுமகேந்திரா தன்னுடைய எல்லாப் படத்துக்கும் ‘நாக்ரா’க்கு மட்டும் அப்பாசாமிதான் வரனும்னு சொல்லிடுவார்.

வேலை திறமையைத் தாண்டி பன்ச்சுவாலிட்டி முதலான நல்ல குணங்கள் நிறைய அவர்கிட்ட இருந்தது. என்னுடைய மாமனாரும், கணவரும் லட்சக்கணக்குல பணம் வரவு செலவுன்னாலும் அப்பாசாமியைத்தான் பார்க்கச் சொல்லுவாங்க. இத்தனைக்கும் அவர் பெரிய படிப்பெல்லாம் படிக்கல. பண விஷயத்துல அப்படியொரு கை சுத்தமான மனுஷன். 100 ரூபாய் கொடுத்தாலும் எவ்வளவு செலவு, எவ்வளவு மிச்சம்னு பேப்பர்ல எழுதிட்டு வந்து தந்திடுவார்.

பாலுமகேந்திராவுடன் ALS அப்பாசாமி

எங்களைத் தெரிஞ்ச எல்லா பிரபலங்களுக்கும் அப்பாசாமியைத் தெரியும். மறைந்த கலைஞர் குடும்பம், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர்னு அவர்கிட்ட பலர் நல்லா பழகுவாங்க. சிவாஜி வீட்டுப் பிள்ளைங்க எல்லாரும் ‘ஆல் இன் ஆல்’ அப்பாசாமினுதான் இவர கூப்பிடுவாங்க. என்னுடைய மகள்கள், மகன் எல்லாருமே அப்பாசாமியைப் பிரிச்சுப் பார்த்ததேயில்ல. எங்க பிள்ளைங்க வீட்டுக்கு வந்தா, அவர் கிட்டையும் ஆசிர்வாதம் வாங்கிட்டுத்தான் போவாங்க.

அப்பாசாமியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னாடி இறந்துட்டாங்க. ஒரே மகன். மனுஷன் நோய்னு படுத்ததே கிடையாது. கடுமையான உழைப்பாளி. அதனால்தானோ என்னவோ மே முதல் தேதி உழைப்பாளர் தினத்தன்னைக்கு இறந்துட்டார். சுருக்கமாகச் சொல்லணும்னா, அபூர்வமான ஒரு மனுஷன். 62 ஆண்டா ஒரே இடத்துல வேலை பார்த்த ஒருத்தரையெல்லாம் இனி எப்போதாவது யாராவது பார்க்க முடியுமா என்ன?” என நெகிழ்ச்சியுடன் பேசினார் ஜெயந்தி கண்ணப்பன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.