ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் பாகம் மார்ச் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச்.9) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, மத்திய அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப். 1-ம் தேதி தாக்கல் செய்தார். பல்வேறு அமளிகளுக்கு மத்தியில் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 அன்று முடிவடைந்தது. இடைவேளைக்குப் பிறகு கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 வரை நீடிக்கிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பங்கேற்க உள்ள திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம். நாளை (9-ம் தேதி) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

இந்தித் திணிப்பு, தொகுதி மறுவரையறை விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்தை கிளப்ப திமுக தயாராகி வரும் சூழலில், திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுவது கவனம் பெறுகிறது.

இந்தக் கூட்டம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு, சென்னை,
அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.