புதுடெல்லி: சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது ரயில் பெட்டியைப் போல மாறிவிட்டது. இந்த பெட்டியில் இடம் கிடைத்து ஏறியவர்கள் அடுத்தவரை ஏறுவதற்கு அனுமதிப்பதில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள பி.ஆர். கவாய்க்கு பிறகு இந்த ஆண்டின் இறுதியில் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்க உள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016-2017-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டப் போரட்டத்தின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், “ தொகுதி மறுவரையின்போது ஓபிசி குறித்த தரவுகள் இருந்தபோதும் அதனை பயன்படுத்தி மகாராஷ்டிர அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
மாறாக சில அதிகாரிகளை மட்டும் கைக்குள் வைத்துக்கொண்டு உள்ளாட்சி நிர்வாகத்தை அரசு தன்னிச்சையாக நடத்தி வருகிறது. எனவே, விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றார்.
மற்றொரு வழக்கறிஞரான கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், “ ஓபிசி பிரிவில் அரசியல் ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அதன் பலன்களை வழங்க வேண்டும். அதுதான் இடஒதுகீட்டின் உண்மையான நோக்கம்” என்றார்.
இதையடுத்து நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில், “ நாட்டில் இடஒதுக்கீடு என்பது ரயில் பெட்டிகளைப் போல மாறிவிட்டது. அதில் இடம் கிடைத்து உள்ளே நுழைந்தவர்கள் மற்றவர்களை உள்ளே வரவிட விரும்புவதில்லை. இதுதான் உள்ளடக்க கொள்கையாக தற்போது மாறி உள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிக வகுப்புகளை அடையாளம் காண அரசுகள் கடமைப்பட்டுள்ளன.
நாட்டில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏராளமான பின்தங்கிய மக்கள் உள்ளனர். அவர்கள் ஏன் (இடஒதுக்கீட்டின்) பலன்களை பெறக்கூடாது? ஒருசில குடும்பங்கள் மற்றும் குழுக்கள் மட்டுமே இடஒதுக்கீட்டின் சலுகைகளை தொடர்ந்து அனுபவித்து வருகின்றன” என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.