பாக். ட்ரோன் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் வீடியோவுடன் விளக்கம்

புதுடெல்லி: மே.8 – 9 இடைப்பட்ட இரவுநேரத்தில் இந்தியாவின் மேற்கு எல்லைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தின் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில், “பாகிஸ்தான் ராணுவம் மே 8-9 இடைப்பட்ட இரவில் இந்தியாவின் மேற்கு எல்லைகளை ஒட்டியப் பகுதிகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டது. வேறு சில ஆயுதங்களையும் பயன்படுத்தியது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகேயும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டது.

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டதோடு, எல்லையில் நடந்த பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டன.

தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும், பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணுவதிலும் இந்திய ராணுவம் உறுதியுடன் உள்ளது. அனைத்து தீய சக்திகளுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

ந்தியா – பாக். போர் பதற்றம் பின்னணி: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம்.

அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து வியாழக்கிழமை பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக இரவிலும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.

எல்லையோர மாநிலங்களில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள எல்லை கிராமங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமலாகியுள்ளது. இதுபோல், தலைநகர் டெல்லியிலும் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.