”நீட் தேர்வு யாருடைய ஆட்சிக் காலத்தில் வந்தது?”.. பேரவையில் திமுக, அதிமுக காரசார விவாதம்

நீட் தேர்வு யாருடைய ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சமீபத்திய ஆண்டுகளாக எப்போது சட்டப்பேரவை கூடினாலும் நீட் தேர்வு தொடர்பான பிரச்சனை எழுப்பப்படுவது வழக்கமாகி வருகிறது. இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி பேசிக்கொண்டு இருக்கும்போது நீட் தேர்வு யார் ஆட்சியிலே கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பான பிரச்சனை எழுந்தது.

image
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது எனப் பேசினார். அப்போது குறுகிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டபோது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி அதனை கடுமையாக எதிர்த்தார். அதனால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு தவிர்க்கப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சியிலும் நீட் தேர்வு  எதிர்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அதிமுக ஆட்சி காலத்தில்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது என தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எப்படி அமல்படுத்தாமல் இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். பிறகு இரு தரப்பிலும் மாறி மாறி கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு விவாதத்தை முடித்து வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.