வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்று (12.01.2023) விலகியது. இதன் காரணமாக 12.01.2023 மற்றும் 13.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
14.01.2023 முதல் 16.01.2023 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
முன்னதாக கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை முடிந்தாலும் அதன் தாக்கம் தென் மாவட்டங்களில் தொடர்ந்தது என்றும் இதனை அடுத்து தமிழகம் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்றுடன் பருவமழை விலகுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே இன்னும் சில நாட்களுக்கு தமிழக முழுவதும் வறண்ட வானிலையே இருக்கும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.