Tax For Pet Dogs: டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. சமீப காலங்களில் நாய்கள் பலரையும் தாக்கும் சம்பவங்கள் நடந்தன. தொடர்ந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
இதையடுத்து, பல்வேறு வகை நாய்களை வீட்டில் வளர்க்க சில மாநகராட்சிகள் தடை விதித்தன. அதாவது மனித உயிருக்கு ஆபத்தான வகையில் இருக்கும் நாய்களை கண்டறிந்து அவற்றை பொதுவெளியில் இருந்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். நாய்க்கு தடுப்பூசி செலுத்துதல், வீதிகளை குப்பைகள் தேங்காமல் அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.
அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் நகராட்சி, மக்களின் பாதுகாப்பு மற்றும் தூய்மைக்காக, நாட்டிலேயே முதல் முறையாக நாய் வளர்ப்பவர்களுக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதனை நேற்று நடந்த கூட்டத்தில், 40 கவுன்சிலர்கள் சேர்ந்து ஒருமனதாக முடிவு எடுத்துள்ளனர்.
சாகர் மாநகராட்சி இதனை சட்டமாக இயற்றிய உடன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. சாகர் நகரின் தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், நாய் உரிமையாளர்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெருநாய்களின் தொல்லை மட்டுமின்றி, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களாலும் பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. அவை பொது இடங்களை அசுத்தப்படுத்துவதுதான் வரி விதிப்புக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சாகரில் உள்ள அனைத்து வளர்ப்பு நாய்களும் பதிவு செய்யப்பட்டு, தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என அறிவிறுத்தியுள்ளது. தொடர்ந்து, செல்லப் பிராணிகளை வளர்க்கும் அதன் உரிமையாளர்களிடம் இருந்து வரி விதிக்கப்படும்.
சாகர் நகராட்சி தலைவர் விருந்தாவன் அஹிர்வார் கூறுகையில், “நகரம் முழுவதும் தெருநாய்களும், நாய்களை வளர்ப்பவர்களும் அசுத்தம் செய்து வருகின்றன. மக்களை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகமாகியுள்ளது. என்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பிரச்னை எழுப்பினர். இந்த வகை வரி விதிக்கப்படும் நகரங்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது” என்றார்.