Ghilli: "ஏப்ரல் 17-ம் தேதி மீண்டும் வெளியாகிறதா `கில்லி'?" – விளக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்

புதிய படங்கள் பலவும் சிக்கித் தவிக்கும் சூழலில், வசூலில் அதிரடியாக மிரட்டிக் கொண்டிருக்கின்றன ரீ-ரிலீஸ் படங்கள்.

இப்போது ‘திருமலை’, ‘வாலி’ ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதனையடுத்து வருகிற மார்ச் 1-ம் தேதி, ‘கோ’, ‘ஷாஜகான்’, ‘சிட்டிசன்’ ஆகிய திரைப்படங்களும் வெளியாகவிருக்கின்றன. ஆனால், இப்படியான ரீ-ரிலீஸ் வழக்கம் தொடங்கப்பட்டது முதல் பலரும் ‘கில்லி’ திரைப்படத்தைதான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 2004-ம் ஆண்டு விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்தைத் திரையில் மீண்டும் காண வேண்டும் என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் ரீ-ரிலீஸுக்காக எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சமூல வலைதளப் பக்கங்களில் ‘கில்லி’ திரைப்படம் ஏப்ரல் 17-ம் தேதி ரீ-ரிலீஸாகிறது என்ற அறிவிப்பு போஸ்டரைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அதிகாரபூர்வ பக்கத்திலிருந்து எவரும் இது தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடவில்லை. இது குறித்து முழுமையான விவரங்களைத் தெரிந்துக் கொள்ள ‘கில்லி’ தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தைத் தொடர்புக் கொண்டு பேசினோம்.

AM Rathnam

இதற்குப் பதிலளித்த அவர், “இல்லை, பரவி வரும் செய்திகள் உண்மையல்ல. அதை யார் அப்படிப் பதிவிட்டார்களென தெரியவில்லை. நாங்களே அடுத்த இரண்டு நாள்களுக்குள் பேசி ‘கில்லி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை முடிவு செய்யவுள்ளோம். இப்போது வரை மார்ச் மாதம் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்திலோ ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்றுதான் யோசித்து வருகிறோம். தேதியை பார்த்துவிட்டு சரியான நேரத்தில் வெளியிடத் திட்டமிடுகிறோம்” என முடித்துக் கொண்டார்.

எது எப்படியோ, `கில்லி’ ரீ-ரிலீஸ் உறுதி என்கிற செய்தி, ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.