கேரளா நீங்கலாக நாடு முழுவதும் புதிதாக 1,007 பேருக்கு கொரோனா

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் கேரளா மாநிலத்தில் புதிய பாதிப்புகள் விபரம் சேர்க்கப்படவில்லை.

அம்மாநிலத்தில் தொற்று பரவல் குறைந்ததையடுத்து புதிய பாதிப்பு குறித்த அறிவிப்பை நிறுத்துவதாக அம்மாநில அரசு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாதிப்பு 202 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று 299 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது முந்தைய நாள் பாதிப்பை விட சுமார் 50 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் கடந்த 40 நாட்களில் இல்லாத அளவில் நேற்றைய பாதிப்பு அமைந்துள்ளது. இதேபோல மும்பையிலும் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை பாதிப்பு 23 ஆக இருந்த நிலையில், நேற்று 73 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 39 ஆயிரத்து 23 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,21,737 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றின் பிடியில் இருந்து நேற்று 818 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 6 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 11,058 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றுமுன்தினத்தை விட 188 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 186 கோடியே 22 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 14,48,876 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 4,34,877 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 83.08 கோடியாக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.