இஸ்லாமாபாத் : பாக்., முன்னாள் அமைச்சர் ஷிரின் மசாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அடித்து இழுத்துச் சென்று காவலில் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தவர், ஷிரின் மசாரி. ‘இம்ரான் கான் ஆட்சி கவிழ, ராணுவமும், அமெரிக்காவும் தான் காரணம்’ என, அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.இந்நிலையில், ஷிரின் மசாரியை லாகூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அடித்து இழுத்துச் சென்றதாக அவரது மகள், இமான் ஜைனப் மசாரி தெரிவித்துள்ளார். ” பெண் என்றும் பாராமல் ஆண் போலீசார் என் தாயை அடித்து, இழுத்துச் சென்றனர்,” என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இம்ரான்கானின் முன்னாள் சிறப்பு உதவியாளரான ஷாபாஸ் கில், ஷிரின் மசாரியை காவலில் வைத்துள்ள இஸ்லாமாபாத் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இஸ்லாமாபாத்தின் கோஷார் போலீஸ் நிலையத்தை இம்ரான் கான் கட்சியினர் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement