முட்டை, மீன், கேரட், கீரை… கண்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் அவசிய உணவுகள்|கண்கள் பத்திரம்-23

”உடலின் ஒவ்வோர் உறுப்பும் ஆரோக்கியமாகச் செயல்பட அவற்றுக்கான உணவுப் பரிந்துரை பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். கண்களும் அப்படித்தான். பார்வை தெளிவாக இருக்கவும் கண்களின் உள் பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கவும் குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துகள் மிக முக்கியம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். அத்தகைய உணவுகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் அவர்.

கண்கள் பத்திரம்

கண்களின் வறட்சியை விரட்டும் மீன்கள்

கண்களின் கண்ணீர் ஓட்டத்தை அதிகப்படுத்த ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் மிகவும் முக்கியம். பாதாம் மற்றும் வால்நட் இரண்டும் இதற்கு உதவும். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் இரண்டையும் எடுத்துக்கொள்வதுதான் பலனளிக்கும். அசைவம் சாப்பிடுவோர் என்றால் சால்மன் மீன்கள் சாப்பிடலாம். கண்களின் வறட்சியைப் போக்குவதிலும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் பெரிய அளவில் உதவுபவை. குறிப்பாக நீண்ட நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தபடி வேலை செய்வோருக்கு கண்ணீர் வற்றி, கண்கள் வறண்டுபோகும். அவர்கள் இந்த உணவுகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். ஃபிளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளிவிதைகளைப் பொடித்து மோரில் கலந்து குடிப்பதும் பலன் தரும்.

முதுமையைத் தடுக்க முட்டை….

முட்டையில் உள்ள லூட்டின் மற்றும் ஸியாஸான்தின் (Lutein & Zeaxanthin) இரண்டும் வயதாவதால் ஏற்படும் பார்வையிழப்பு பாதிப்புகள் வராமல் தடுக்கக்கூடியவை. முட்டையிலுள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் துத்தநாகச் சத்தும் பார்வை ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுபவை.

முட்டையைப் போலவே நட்ஸுக்கும் சீட்ஸுக்கும்கூட முதுமை தொடர்பான பார்வை பிரச்னைகளை விரட்டும் தன்மை உண்டு. முந்திரி, பாதாம், வால்நட், வேர்க்கடலை, சியா சீட்ஸ், ஹெம்ப் சீட்ஸ் மற்றும் பிரேஸில் நட்ஸ் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்

பார்வை

வயோதிகத்தால் வரும் பாதிப்பைத் தடுக்க வைட்டமின் சி

வயோதிகத்தால் ஏற்படும் பார்வை மங்குதல், கண்புரை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கும் வைட்டமின் சி, ஈ உள்ள உணவுகள் உதவும். எலுமிச்சை, நெல்லிக்காய், கிரேப்ஃப்ரூட், ஆரஞ்சு, கொய்யா உள்ளிட்டவற்றில் இந்தச் சத்துகள் அதிகம் என்பதால் இளவயதிலிருந்தே இவற்றைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

பார்வை ஆரோக்கியத்துக்கு கேரட்

கேரட் சாப்பிட்டால் பார்வை ஆரோக்கியம் மேம்படும் என்று சிறுவயதிலிருந்தே சொல்லி வளர்க்கப்படுவோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் இரண்டும் பார்வை தெளிவாக, ஆரோக்கியமாக இருக்க அடிப்படை. குறிப்பாக விழித்திரையானது ஒளியை உட்கிரகித்துக்கொள்ள வைட்டமின் ஏ மிக முக்கியம்.

கேரட்டுக்கு அடுத்தபடியாக சர்க்கரைவள்ளிக் கிழங்கிலும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் அதிகம் என்பதால் அதையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கண்

கண்புரையைத் தடுக்க பளீர் நிற காய்கறிகள்

இளம் வயதிலிருந்தே பளீர் நிற காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றினால் கேட்டராக்ட் எனப்படும் கண்புரை வருவதைத் தவிர்க்கலாம்.

விழித்திரையை பலப்படுத்த குங்குமப்பூ

பிறக்கும் குழந்தை சிவப்பாக இருக்க வேண்டுமென்ற ஒரு காரணத்துக்காகத்தான் பலரும் குங்குமப்பூவை சாப்பிடுகிறார்கள். அது விஞ்ஞானரீதியாக உண்மையல்ல. ஆனால் குங்குமப்பூவுக்கு விழித்திரையை பலப்படுத்தும் ஆற்றல் உண்டு. எனவே தரமான குங்குமப்பூவை பாலில் கலந்து குடிக்கலாம்.

அதே போல விழித்திரையில் லூட்டின் மற்றும் ஸியாஸான்தின் (Lutein and Zeaxanthin) எனப்படும் நிறமிகள் (பிக்மென்ட்) இருக்கும். இவற்றுக்கு மஞ்சள்நிற மற்றும் அடர்நிற காய்கறிகள் மற்றும் பழங்கள் உதவும். உதாரணத்துக்கு மஞ்சள் குடமிளகாய், பொன்னாங்கண்ணிக்கீரை, கேரட், மாம்பழம், பப்பாளி போன்றவை.

சிறப்பு மருத்துவர் வசுமதி

தவிர்க்கவே கூடாத தண்ணீர்…

தலை முதல் பாதம் வரையிலான ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீர் அவசியம். குறிப்பாக கண்கள் வறண்டுபோகாமலிருக்கவும் அது அவசியமாகிறது. எனவே தினமும் 3 லிட்டருக்கு குறையாமல் நீர் அருந்த வேண்டியது அவசியமாகிறது.

– பார்ப்போம்

– ராஜலட்சுமி

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.