கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சார்பாக, ‘நமக்காக நம்ம எம்.எல்.ஏ’ என்கிற நடமாடும் மக்கள் சேவை வாகனத்தை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய அரசின் திட்டங்களுக்கு தேவையான விண்ணப்பங்கள் இந்த வாகனத்தில் கிடைக்கும்.

தொகுதியில் உள்ள குறைகள் தொடர்பாகவும் அந்த வாகனத்தில் மனுவாக கொடுக்கலாம். பாஸ்போர்ட் ஊழல் குறித்து ஏற்கெனவே பேசியிருந்தோம். அதுகுறித்த இரண்டாவது அறிக்கையை இன்று வெளியிடுகிறோம். இதுதொடர்பாக ஆளுநரை சந்தித்தும் முறையிட உள்ளோம்.
முதல்வர் தேச பாதுகாப்போடு விளையாடதீர்கள். மதுரையை மையமாக வைத்து போலி பாஸ்போர்ட்டை பெற்றவர்கள் எல்லாருமே குற்றவாளிகள் தான். கடந்த ஆட்சியில், இந்த ஆட்சியில் என்று இது தொடர்பான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்ஃபி வித் அண்ணா போன்ற நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரி அருகே முன் அனுமதி இல்லாமல் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எங்கள் கட்சியினரிடம் கூறியிருக்கிறேன்.

பாஜக-வுக்கும், அதிமுக-வுக்குமான உறவு தொடர்கிறது. அவர்கள் முடிவு என்னவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம். இ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்பட எல்லோருடனும் தனிப்பட்ட நட்பு தொடர்கிறது.
அதிமுக தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதை, அந்தக் கட்சி தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதில் நாங்கள் தலையிட மாட்டோம். அரிசிக்கு ஜி.எஸ்.டி வரி போட்டிருப்பதால் வந்துள்ள பிரச்னை குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளோம்.

ஜி.எஸ்.டி கவுன்சிலில் அனைத்து வரிகளுக்கும் ஒப்புதல் வழங்கிவிட்டுதான் அமல்படுத்தியுள்ளனர். அதில் தமிழ்நாடு சார்பாக நிதி அமைச்சர் பி.டி.ஆர் கலந்துகொண்டார். அப்படி இருக்கும்போது, இப்போது அதை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நாங்கள் வெளியிடும் அனைத்து ஊழல்களுக்கும் உரிய ஆதாரங்கள் உள்ளன. சமீபத்தில் வெளியிட்ட பாஸ்போர்ட் ஊழலில், மாநில அரசு சிலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஆனால், யாரையோ காப்பாற்றுவதற்காக ஏ.டி.ஜி.பி உள்ளிட்டோர் மெத்தனமாக செயல்படுகின்றனர்.

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டெதல்லாம் பேய்.’ என்பது போல, திமுகவினர் சிலருக்கு ஆளுநரை திட்டாவிடின் தூக்கம் வராது. ஆளுநரை வம்புக்கு இழுப்பதையே சிலர் முழுநேர வேலையாக வைத்துள்ளனர். ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும், அவர் அரசியல் ரீதியாக எதுவும் தலையிடுவதில்லை.
ஆளுநர் மீது எந்தத் தவறும் இல்லை. அவரை வம்புக்கு இழுத்து அரசியல் செய்வதை திமுக வாடிக்கையாக வைத்திருக்கிறது. பெரியார் பல்கலைக்கழகம் முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்தியாவில் டாப் 200 பல்கலைக்கழகங்களில் பெரியார் பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாட்டில் இருந்து 38 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இது திராவிட மாடல் அரசுக்கு கிடைத்த பெருமை என முதல்வர் கூறுகிறார். பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சைக்கும், அதே திராவிட மாடல் அரசு என முதல்வர் தானே பொறுப்பேற்க வேண்டும்.
ஒரு கையில் பெரியாரை பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் சாதியை பிடித்துக் கொண்டு 70 ஆண்டுகளாக திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. வீரமணி உள்ளிட்டோர் இதில் மத்திய அரசுக்கு பதிலாக, முதல்வருக்கு தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும். நான் திமுக-வை எங்கும் வசைபாடவில்லை.

திமுகவினர் தான் என்னையும், பாஜவையும் கையை உடைப்போம், காலை உடைப்போம் என வசைபாடுகின்றனர், அவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் மத்தியில் சுட்டிக் காட்டுகிறோம். மற்றபடி அவர்களுக்கும், எங்களுக்கும் பிரச்னை இல்லை.” என்றார்