சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேர்மதுரை என்பவர், அதேபகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த விக்கி (எ) விக்னேஷ் குமார் என்பவர் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த விக்னேஷ் குமார் சேர்மதுரையில் டீ கடையை தாக்கி அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியுள்ளார். மேலும், கடையில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சேர்மதுரை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார் விக்னேஷ் குமாரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது குடிபோதையில் இருந்த விக்னேஷ் குமார் போலீஸாரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் அவரிடம் இருந்து 100 ரூபாய் பணம், 1 வீச்சரிவாள் மற்றும் ஜீப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் நடிகை பாபிலோனாவின் சகோதரர் என்பதும் அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் விக்னேஷ் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in