சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் வரும் 15-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலை வேண்டுவோர் இந்த முகாமில் கலந்துகொள்ளுமாறு வேலைவாய்ப்புத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில், வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்கும் வகையில், அவ்வப்போது தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செய்து வருகிறது.
இந்த நிலையில், வரும் 15-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூகாலேஜ் வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிவித்துள்ளது.
இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, ஐடிஐ, நர்சிங், பார்மஸி, பொறியியல் படித்தவர்களும் பங்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முகாமில், சிறப்பு நேர்வாக உடல் தகுதியுடைய பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் பல தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு கல்வித் தகுதிகளை உடைய பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள வரும் உடல் தகுதியுடைய பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து நபர்களும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் நேரில் வருகை புரிந்து தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.