பாகிஸ்தானின் பஞ்சாப் லாஹிண்டே பகவல்பூர் நகரில் சக் என்ற இடத்தில் வசித்து வருபவர் கங்காராம். இவரது மனைவி குசும் பாய். பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் குசும் பாய், நில உரிமையாளர் முகமது அக்ரமிடம் கூலி வாங்க கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால், அக்ரம் அவரை அடித்து விரட்டி விட்டுள்ளார்.
இதன்பின்னர், அடுத்த நாள் காலையில் அக்ரம் மற்றும் அவரது கூட்டாளிகளான 6 பேர் பெண் தொழிலாளியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அடித்து, தாக்கி கயிற்றில் கட்டி போட்டுள்ளனர். பின்னர், குடும்பத்தினர் முன்னிலையிலேயே குசும் பாயை, அந்த கொடூர கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசுக்கு சென்றால் பாயையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
இருப்பினும், குசும் பாய் மற்றும் அவரது குடும்பத்தினர் பகவல்பூர் நகர காவல் நிலையத்திற்கு சென்று நேற்று முன்தினம் புகார் அளித்து உள்ளனர். ஆனால், நில உரிமையாளர் முகமது அக்ரமுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் மூத்த காவல் அதிகாரிகள் பலரை அவருக்கு தெரியும் என்றும் கூறி புகாரை பெற்று கொள்ள மறுத்து உள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு அரசாங்கம் திரும்பத் திரும்ப கூறினாலும், அங்குள்ள சிறுபான்மை இந்து சமூகத்தின் மீது முஸ்லீம் தீவிரவாதிகள் மற்றும் நிலபிரபுக்களால் கட்டுக்கடங்காத மிருகத்தனமான தாக்குதல்கள் மிகவும் ஆபத்தான வேகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முன்னதாக மார்ச் மாதம், பூஜா ஓட் என்ற 18 வயது சிறுமி, சிந்த் மாவட்டத்தில் சுக்கூர் என்ற இடத்தில், ரோஹி பகுதியில் கடத்தலை தடுக்க முயற்சித்தபோது, நடுத்தெருவில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.