7-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி..!

எட்டாவது பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்திய அணி 7வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.

வங்க தேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1-ம் தேதி 8-வது பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் வங்க தேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.

இந்நிலையில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்துக்கான டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இந்திய அணியின் பந்துவீச்சை சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இதனால் இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.

இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷாபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர்.

தொடக்கம் முதல் மந்தனா அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். மறுபுறம் ஷாபாலி வர்மா 5 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுபுறம் அதிரடியா தொடர்ந்த மந்தனா பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரை சதம் அடித்தார். இதனால் இந்திய அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி 7வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.