உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நொய்டா வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று 7 மாத குழந்தையை கடித்து குதறியது. அதில் அக்குழுந்தைக்கு வயிற்றில் படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை குழந்தை உயிரிழந்தது. இதனையடுத்து கோபமடைந்த அப்பகுதிமக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தங்களது குழந்தைகளுக்கும் இதே போல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அதை ஏற்காத மக்கள், அங்கு சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதில் நகராட்சி நிர்வாகம் தவறிவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
வினோத் சர்மா என்ற குடியிருப்பாளர் கூறும்போது, நாய்கள் காட்டுமிராண்டித்தனமாக சென்று குழந்தைகளை பெரும் அச்சுறுத்தி வருகிறது என்றார். தெருநாய்களிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.