இந்தி தேர்வில் தோல்வி… மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்!!

இந்தி தேர்வில் தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர் ஒருவரை ஆசிரியர் பிரம்பால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள பாடல்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன், அந்த பகுதியிலுள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது வகுப்பு ஆசிரியர் பெயர் ஷோபரன் (42).

அந்த மாணவன் சமீபத்தில் நடந்த இந்தி தேர்வில் தோல்வியுற்றார். இதனால் மாணவனை கண்டிப்பதற்காக ஆசிரியர் பிரம்பால் தாக்கியுள்ளார். ஆசிரியர் மாணவனை கடுமையாக தாக்கியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.

மயக்கமடைந்த சிறுவனை சக ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அதோடு சிறுவனை கடுமையாக தாக்கியதாக சிறுவனின் உறவினர்கள், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வந்தனர். மாணவனை தாக்கிய ஆசிரியரே, மாணவனுக்கு உதவி செய்து வந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி மாணவரின் குடும்பத்திற்கும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் பண உதவி செய்துள்ளார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவன் இறந்த செய்தியை அறிந்த ஆசிரியர் தலைமறைவானார்.

பின்னர் அவரை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் தாத்ரி பைபாஸ் அருகே வைத்து கைது செய்தனர். மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி, ஆசிரியர் அடித்ததில் மாணவரின் மூளையில் ரத்தம் உறைந்திருப்பதாகவும், நரம்பின் சிதைவு காரணமாக இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.