
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஒத்தவாடைபகுதியை சேர்ந்த பத்மினி ( 60) என்பவர் அதே பகுதியில் சங்கு, மணி, துப்பட்டா, துணிப்பை இவைகளை சாலையோரம் போட்டு விற்பனை செய்து வந்தார். அவரது இளையமகன் முரளி (37) கஞ்சா போதைக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் முரளி தாய் பத்மினியிடம் பணம் கேட்டுள்ளார். ஏற்கனவே மகன் கஞ்சா போதையில் இருந்ததால் பத்மினி பணம் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முரளி தாயை கண்மூடித்தனமாக தாக்கினார்.

மேலும் அருகில் இருந்த கட்டையை எடுத்து பத்மினி தலையில் அடித்ததில் அவர் வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பத்மினி உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளியை தேடினர்.
அவர் தாய் இறந்தது கூட தெரியாத அளவிற்கு போதையுடன் அதே பகுதியில் பதுங்கி இருந்தார். அதன் பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in