தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்கினாலும், வெடித்தாலும் 200 ரூபாய் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
வரும் 24-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடித்தால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடித்தால் 200 ரூபாய் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும், பட்டாசு தயாரித்தாலோ அல்லது இருப்பு வைத்தாலோ, விற்பனை செய்தாலோ 5,000 ரூபாய் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
டெல்லியில் பட்டாசு தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த வரும் ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.