
கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்க, பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. முகக்கவசம் அணியாதவர்கள் மூலம் கொரோனா பரவுவதால், அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது செப்டம்பா் 30-ம் தேதிக்கு பிறகு அமல்படுத்தக் கூடாது என்று செப்டம்பா் 22-ம் தேதி நடைபெற்ற டெல்லி பேரிடா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதால் இனியும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முடிவை அமல்படுத்தும் வகையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்படுவதாக டெல்லி அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. எனினும், கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததால் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத்தை டெல்லி அரசு ரத்து செய்தது. அதன் பின்னர் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததால் மூன்று வாரங்களில் மீண்டும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.