
தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இனிப்பு, பட்டாசு என்று ஒரு பக்கம் தீபாவளியை கொண்டாடினாலும், பெரிய நடிகர் படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இந்தப் படங்களுக்கான புரமோஷன் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் கடைசி இரண்டு திரைப்படங்களும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல இடங்களில் வெற்றி அடைந்தன. இதனால் அவர்கள் நடித்துள்ள சர்தார் மற்றும் பிரின்ஸ் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இரண்டு திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு காட்சிகள் திரையிட திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
newstm.in