
தமிழகத்தில், தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமான நிலையம் வந்தார். அப்போது அவரிடம், ‘தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் கூறியதாவது: “தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் சேர்த்து விடுமுறை அளிப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இந்த விடுமுறையானது பள்ளி கல்வித்துறைக்கு மட்டுமின்றி தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். எனவே, இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார்” என்று அமைச்சர் தெரிவித்தார்.