
“மூத்த பத்திரிகையாளரும், ‘இன்டஸ்ட்ரியல் எகோனாமிஸ்ட்’ இதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளருமான எஸ்.விஸ்வநாதன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இந்நிலையில் இவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும், ‘இன்டஸ்ட்ரியல் எகோனாமிஸ்ட்’ இதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளருமான எஸ்.விஸ்வநாதன் (வயது 84) நேற்று இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவையடுத்து இன்று மறைவெய்தினார் என்று அறிந்து வேதனையடைந்தேன்.
சென்னையில் இருந்து வெளிவரும் தொழில் துறை சார்ந்த ‘இன்டஸ்ட்ரியல் எகோனாமிஸ்ட்’ இதழை அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகத் திறம்பட நடத்தி வந்த விஸ்வநாதன் இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாது, பல்வேறு உலக நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தொழிற்திட்டங்களை ஆழமாக அறிந்து கொண்டு பல கட்டுரைகளை வழங்கியவர் ஆவார்.
வயதை மீறிய சுறுசுறுப்புடனும், ஆர்வத்துடனும் இயங்கி வந்த அவரது மறைவு ஊடகத்துறைக்குப் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் சக பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.