கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (46). இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்று ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் காரில் வீட்டிற்கு திருப்பினார்.
இவர்கள் வந்த கார் தென்னமநல்லூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவிகிருஷ்ணா உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகன் இறந்ததால் ரவி கிருஷ்ணாவின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் மிகுந்த மனவேதனை அடைந்து துக்கத்தில் காணப்பட்டனர்.

இந்த நிலையில் தங்களது ஒரே மகன் இறந்ததால் துக்கம் தாங்க முடியாததால் சங்சீவ் சங்கர்-நந்தினி தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதன்படி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த 2 பேரும் பூச்சி மருந்தை குடித்தனர். இதற்கிடையில் நந்தினியின் அண்ணன் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர் நந்தினி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் நந்தினியும், சஞ்சீவ் சங்கரும் விஷம் குடித்து மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் நந்தினி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து சஞ்சீவ் சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த தம்பதி சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.