இரண்டு மனைவிகளிடம் அனுதாபத்தை பெற தன்னை தானே கடத்தி நாடகமாடிய கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தீப் கெய்க்வாட் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மனைவி குடும்பம் இருக்கும் நிலையில், இரண்டாவதாக வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.
இரண்டாவது மனைவி சுனிதா, தனது கணவரை ஒரு கும்பல் கடத்தி சென்றதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இருவரும் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சந்தீப்பை அடித்து கடத்தி சென்றதாக கூறினார்.
வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், கடத்தல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவியை ஆராய்ந்தனர். அதனடிப்படையில் அந்த ஆட்டோவை கண்டறிந்து விசாரித்தனர்.
குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு நபரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறி தனது வாகனத்தை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்ததாக ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து சந்தீப்பை கடத்தி சென்றவர்கள் ஜாவேத் கான், ஆகாஷ் அபாங் மற்றும் அவி பாட்டீல் என்று கண்டறியப்பட்டது. அவர்களிடம் விசாரித்தபோது, சந்தீப்பை ஏற்றிக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றதாகவும், பின்னர் அவர், ஒருவரின் ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றதாகவும் கூறினர்.
இதைத்தொடர்ந்து ஸ்கூட்டி உரிமையாளர் ஜாவேத் என்பவரை விசாரித்த போது அவர் இது ஒரு போலி கடத்தல் என்று ஒப்புக்கொண்டார். இதையடுத்து சந்தீப் இருக்கும் இடத்தை அறிந்த காவல்துறையினர் அங்கே சென்று அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் விசாரித்ததில், தன்னை கடத்தியதாக கூறினால், தனது இரண்டு மனைவிகளுக்கும் தன் மீது அனுதாபம் வரும் என்றும், என்னை இருவருமே சரிவர பார்த்துக் கொள்ளவில்லை என்பதால் இப்படி செய்ததாகவும் கூறினார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in