நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகுகோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை அணிந்தும், பலகாரங்கள் உண்டும், பட்டாசு வெடித்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
ஒளி மற்றும் மகிழ்ச்சிக்கான புனித திருவிழாவில், அறிவு மற்றும் சக்தியின் விளக்கை ஏற்றி உதவி தேவைப்படுவோரின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர நாம் முயற்சி செய்வோம். இந்த பெருவிழாவில், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும் பெருக வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி வெளிச்சம் மற்றும் பிரகாசத்துடன் தொடர்புடையது. இந்த மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் மேலும் அதிகரிக்கட்டும். நீங்கள், உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறப்பான தீபாவளியை கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.