பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாகியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கியது. போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
பரபரப்பான சூழலில் ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவளித்தனர். இதனையடுத்து, பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் களமிறங்கினார்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு சில மணிநேரம் இருக்கும்போது, போட்டியில் இருந்து விலகும் முடிவை போரிஸ் ஜான்சன் வெளியிட்டார். பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியிட்டார்.
பெரும்பாலான எம்.பி.க்களின் ஆதரவு ரிஷி சுனக்கிற்கு இருந்ததால் அவர் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்டுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..
newstm.in