
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து அதிகாலை 12.07 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டு ஏறக்குறைய 19 நிமிடங்களில், ராக்கெட் 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை 601 கிமீ உயரத்தில் ஒரு வட்டமான குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இன்றைய ஏவுதல் மூலம், எல்விஎம்3 உலகளாவிய வணிக வெளியீட்டு சேவை சந்தையில் நுழைந்தது.

இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி-3 ராக்கெட் சுமார் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.
அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. ஒன்வெப் நிறுவனமானது உலக நாடுகளுக்கு அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், இந்த 36 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
செயற்கைகோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின்னர் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், “நாங்கள் ஏற்கனவே தீபாவளி கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டோம். இப்போது ராக்கெட் அதன் நோக்கம் கொண்ட பாதையில் உள்ளது” என்றார்.
மேலும் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பணி என்றும், பிரதமர் மோடியின் ஆதரவால் இது சாத்தியமானது எனவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். எல்விஎம்3 வணிகச் சந்தைக்குள் வர வேண்டும் என்று பிரதமர் விரும்பியதாகவும், நமது ராக்கெட்களை பயன்படுத்தி வணிகக் களத்தை விரிவாக்குவதற்கு அவர் அளித்த ஆதரவு முக்கியமானது எனவும் புகழாரம் சூட்டினார்.