
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மேற்கு சியாங்கில் இன்று காலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பாசரில் இருந்து 52 கிமீ வடக்கு மற்றும் வடமேற்கு தொலைவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி காலை 10:31 மணிக்கு புவி மேற்பரப்பில் இருந்து 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில், சரியாக 10.59 மணி அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவும் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலையில், இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது.
அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.