சதுரங்க வேட்டை பாணியில் தமிழகத்தில் மீண்டும் ஒரு எம்.எல்.எம் மோசடி… ரூ. 900 கோடி மோசடி..!!

காவல்துறை தரப்பில் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வந்தாலும், மக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் கூட ஐஎஃப்எஸ் மற்றும் ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் 10,000 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மோசடி செய்யும் நிறுவனங்களை கண்காணித்து, அவற்றின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் சென்னை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஹிஜாவு என்கிற நிறுவனத்தின் மீதும் தற்போது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ரூ. 1 லட்சம் கொடுத்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கானோரிடம் இந்நிறுவனம் பணம் வசூல் செய்திருக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக வட்டி தராமல் மோசடி செய்ததாக ஹிஜாவுகுழுமத்தின் மீது அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் புகார் அளித்திருந்தனர்.அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து ரூ. 900 கோடி அளவில் மோசடி அரங்கேறியுள்ளது.

புகாரின் அடிப்படையில் ஹிஜாவு குழுமத்தின் தலைவர் சௌந்தரராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் மீதும், இந்த நிறுவனத்தை நடத்திய நிர்வாகிகள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். மலேசியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணை கிணறு வைத்திருப்பதாகவும், மக்களிடம் வசூலிக்கும் பணத்தை அந்த எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் பார்ப்பதாகவும் கூறி, இந்த நிறுவனத்தினர் மோசடி செய்திருக்கின்றனர். சுமார் ஒரு லட்சம் பேர் வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஹிஜாவு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ, ஈமெயில் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.