தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசினோம். கூட்டணி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்று, மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், 85 மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
கிளை அளவில் கட்சியை பலப்படுத்தவும், கடந்த முறை தேர்தல்களில் செய்த தவறுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செய்யக் கூடாது எனவும் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார்.
இந்த கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் கூறுகையில், “தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசினோம். கூட்டணி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அதுகுறித்து இப்போது விவரிக்க முடியாது. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
சமீப காலமாக, கமல்ஹாசன் திமுகவுடன் நெருங்கிய நட்பில் உள்ளார். இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே தற்போது பாஜக உடன் நட்பு பாராட்டி வருகிறது. இதனால், ஐஜேகே-வுக்கு பதிலாக மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.