பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 7 குழந்தைகளும் அடங்குவர்.
அவர்களது உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதகாவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 21 பேர் பலியானது காசாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.