காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும்: சவுக்கு சங்கருக்கு என்ன நிபந்தனை!

நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர். இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த சிறைத் தண்டனை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும்வரை வழக்கு தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டு, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.

சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவில், நிபந்தனைகளை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் வழங்கவும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகளை வழங்கியுள்ளார்.

அதில், “சவுக்கு சங்கர் தினமும் காலை 10:30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்களில் எந்த கருத்துக்களையும் பதிவிடக் கூடாது. நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சவுக்கு சங்கர் ஆஜராக வேண்டும். நீதித்துறை குறித்து எந்த கருத்துக்களையும் சவுக்கு சங்கர் தெரிவிக்கக் கூடாது. 20,000 மதிப்புள்ள பத்திரத்தில் இரண்டு நபர்கள் பிணையம் வழங்க வேண்டும்.” என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.