புதுச்சேரி மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணமாக தலா 2,500 ரூபாயை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவ குடும்பங்களுக்கு தலா 2,500 ரூபாய் மழைக்கால நிவாரணமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டின் முதற்கட்ட நிவாரணமாக 17 ஆயிரத்து 983 மீனவ குடும்பங்களுக்கு 4 கோடியே 49 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
இதில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், மீன்வளத்துறை இயக்குநர் பாலாஜி, இணை இயக்குநர் தெய்வ சிகாமணி மற்றும் அதிகாரிகள், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த தொகையானது புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த 9127 குடும்பங்களுக்கும், கரைக்கால் பகுதியைச் சேர்ந்த 3334 குடும்பங்களுக்கும், மாஹே பகுதியைச் சேர்ந்த 515 குடும்பங்களுக்கும், ஏனாம் பகுதியைச் சேர்ந்த 5007 குடும்பங்களுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.