மறைந்த முதுபெரும் தலைவர் டி.எம். காளியண்ண கவுண்டருக்கு மணிமண்டபம் வேண்டும்… தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!

சேலம் மாவட்டம் அக்கரைப்பட்டி கிராமத்தில் முத்து நல்லி கவுண்டர் – பாப்பாயம்மாள் தம்பதிக்கு 10-01-1921 ம் ஆண்டு மகனாக பிறந்தவர் காளியண்ண கவுண்டர். குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிற்கு இடம் பெயர்ந்தார். திருச்செங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பி.காம், பி.ஏ. பட்டப் படிப்பில் சேர்ந்தார். பின்னர் எம்.ஏ முதலாமாண்டு படிக்கும் போது விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். அதன் காரணமாக அவரது படிப்பைத் தொடர கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதன் பின் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ பட்டம் பெற்றார்.

டி.எம். காளியண்ண கவுண்டர் அவர்கள் 1947-ம் ஆண்டு தனது 27-வது வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கபட்டார். இவர் சட்ட மாமேதை அம்பேத்கர், மகாத்மா காந்தி, கக்கன், ராஜாஜி மற்றும் கர்ம வீரர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் இந்திய திருநாட்டிற்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம். ஜமீன் குடும்பத்தை சேர்ந்த டி.எம்.காளியண்ண கவுண்டர் தனது அரசியல் வாழ்க்கையில் தமிழகத்தில் ஓரே ஆண்டில் 2 ஆயிரம் அரசு பள்ளிகளையும், 300 நூலகங்களையும் திறந்து வைத்த பெருமை இவரையே சாரும். 101 வயது வரை டி.எம். காளியண்ண கவுண்டர் காங்கிரஸில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

இந்நிலையில் கடந்த ஆண்டு மே 28 அன்று வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். ஒவ்வொரு சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களிலும் தவறாது தனது வாக்கினை பதிவு செய்து விடுவார். மிக பெரிய ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்த டி.எம்.காளியண்ண கவுண்டர் தமிழக சட்டசபையில் ஜமீன் ஒழிப்பு முறைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்ற பெற செய்தார். இதன் காரணமாக தனது சொத்துக்களை ஏழை, எளியோருக்கும், பள்ளிகள் அமைக்கவும் வழங்கினார். இவர் வாழும் வரையிலும் மிகுந்த எளிமையுடனே வாழ்ந்து மறைந்தார்.

இருப்பினும் அவரது மறைவின் போது அவருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை மாவட்ட நிர்வாகமும், உள்ளூர் திமுக பிரதிநிதிகள் ஏற்க மறுத்ததாகவும், அதன்பின்

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் செல்வபெருந்தகை ஆகியோர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதன்பின் இரவு 7 மணி அளவில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட மகானுக்கு நாமக்கல்லில் மணிமண்டபம் கட்ட வேண்டும் எனவும், நாமக்கல்லில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் காங்கிரஸை சேர்ந்த செல்வபெருந்தகை கேள்வி எழுப்பினார். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸை சேர்ந்த சமூகத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்து, அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகவும், எளிமையாகவும் வாழ்ந்து மறைந்த பெரியவர் காளியண்ண கவுண்டருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.