சாலையில் செல்லும்போது செய்த சிறு தவறினால் பரிதாபமாக போன ஒரு உயிர்..!!

புதுக்கோட்டை காவேரி நகரில் வசித்து வருபவர் குமார். இவர் தனது நண்பர் சந்துருவுடன் இருசக்கர வாகனத்தில் திருமயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரசம்பட்டி அருகே சென்றபோது வாகனத்தை ஓட்டிச் சென்ற குமாரின் மூக்கு கண்ணாடி தவறி கீழே விழுந்துள்ளது. இதனையடுத்து மூக்குக் கண்ணாடியை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தை உடனே குமார் திருப்பியுள்ளார்.

அப்போது திருவோணத்தில் இருந்து செங்கோட்டை நோக்கி மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வாகனத்தை ஓட்டிச் சென்ற குமார் படுகாயம் அடைந்தார்.

இந்த நிலையில், விபத்துக்குள்ளான லாரி திடீரென நின்றநிலையில் லாரியின் பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் லாரியின் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமயம் போலீசார், விபத்தில் உயிரிழந்த சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த குமார் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி சாலையில் விழுந்த மூக்கு கண்ணாடியை எடுப்பதற்கு பின்னால் வரும் லாரியை கவனிக்காமல் உடனே இருசக்கர வாகனத்தை திருப்பியதால் இந்த விபத்து நடந்ததாக விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.