சென்னையில் காதலி பிறந்தநாளில் காதலன் தற்கொலை..!!

சென்னை முகப்பேர் மேற்கு முதல் பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் மோகன் (19). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், ஒருமுறை தனது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பின்னர், கேக் துண்டுகளை அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார்.

அப்போது, தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வரும் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுமதி (19) என்பவர் கடற்கரைக்கு வந்து இருந்தார். அவருக்கும், மோகன் கேக் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தின் போது, சுமதி மீது மோகனுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்கள் கழித்து மீண்டும் தோழியுடன் சுமதி கடற்கரைக்கு வந்தபோது, மோகனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அப்போது, இருவரும் பேசி, செல்போன் நம்பரை பரிமாறி கொண்டனர். இவர்களிடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில், அந்த நட்பு காதலாக மாறியது. கடந்த ஒன்றரை வருடமாக இவர்கள் காதலித்து வந்தனர். கடற்கரை, சினிமா என பல இடங்களில் சுற்றி திரிந்த இந்த காதல் ஜோடி, தங்களிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக, நாள்கணக்கில் பேசாமலும் இருந்துள்ளனர். சில நேரங்களில், மாறிமாறி தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றுகூட சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி சுமதிக்கு பிறந்தநாள் என்பதால், சுமதியை செல்போனில் தொடர்பு கொண்ட மோகன், ”உனக்கு பிறந்தநாள் பரிசு தர ஆசைப்படுகிறேன். என்ன வேண்டும்” என்று கேட்டுள்ளார். அப்போது, இவர்களிடையே வழக்கம்போல் சண்டை ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த மோகன், ”நான் தற்கொலை செய்து கொள்ள போகிறன்.” என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். இதைக்கேட்ட சுமதி, வழக்கமாக காதலன் மோகன் கூறுவதுதான் என்று இருந்தார். ஆனால், காதலியிடம் சொன்னபடியே படுக்கை அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு மோகன் தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நொளம்பூர் போலீசார் மோகன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மோகனின் வீட்டில் சோதனையிட்ட போலீசார், அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கடைசியாக வந்த நம்பரை போலீசார் தொடர்பு கொண்டபோது, காதலன்தான் பேசுகிறார் என நினைத்து, போனை எடுத்த சுமதியிடம், நடந்ததை போலீசார் தெரிவித்தனர். இதைக்கேட்டதும், அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். பின்னர், அவரது பெற்றோர் மூலம் சுமதியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.