
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிராச்சி ராதோர் மற்றும் ருத் ஜான்பால் கொய்யலா ஆகிய இரண்டு திருநங்கைகள், ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு மருத்துவர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கம்மம் பகுதியைச் சேர்ந்த ருத் ஜான்பால் கொய்யலா கூறுகையில், “நான் கடந்த 2018-ம் ஆண்டு ஹைதராபாத் மல்லா ரெட்டி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தேன். ஆனால், திருநங்கை என்பதால், 15-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நடந்த பணிக்கான நேர்காணலில் திருப்பி அனுப்பப்பட்டேன். ஆனால், ஜெனரல் பிரிவில் நான் தற்போது அரசு மருத்துவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

பிராச்சி ராதோர் கூறுகையில், “அடிலாபாத்தைச் சேர்ந்த நான், ரிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தேன். அதன் பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றினேன். நான் திருநங்கை என்பதால், அந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வர தயங்குவார்கள் என்று கூறி, பணியிலிருந்து என்னை நீக்கிவிட்டனர்” என்றார்.