மத்திய பிரதேசத்தில் சரியாக தூங்க முடியவில்லை என்று மருத்துவர் ஒருவர் சேவல் மீது புகார் கொடுத்துள்ளார்.
இந்தூரின் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருகிறார் அலோக் மோடி. இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், எனது அண்டை வீட்டில் உள்ளவர், கோழி மற்றும் சேவல்களை வளர்த்து வருகிறார். அந்த சேவல் மற்றும் கோழிகள் தினமும் அதிகாலை தவறாமல் 5 மணிக்கெல்லாம் கூவுகிறது. இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்ற போது சேவல் கூவி தூக்கத்தைக் கலைத்து விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். அலோக் மோடியின் புகாரை பலாசியா காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் உறுதிப்படுத்தி உள்ளார். இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையைப் பின்பற்றுவோம் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். கோழி கூவியதற்கு குற்றவியல் வழக்கு பதிவு செய்திருப்பது மத்திய பிரதேசத்தில் ருசிகரமான நிகழ்வாக கருதப்படுகிறது.
newstm.in