
தாம்பரம் ரங்கநாதபுரம், 1வது தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார் (50). இவர் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மேகலா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் நடராஜன் (30), கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அபிநயா(28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இருவருக்கும் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணமாகி ஒன்றரை மாதம் ஆன நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வீட்டில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றுடன் அபிநயா மாயமாகி உள்ளார்.
எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அச்சமடைந்த நடராஜன் இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், 40 நாட்கள் தேடுதலுக்கு பிறகு பழையமகாபலிபுர சாலை விடுதி ஒன்றில் தங்கியிருந்த அபிநயாவை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மதுரையை சேர்ந்த அபிநயா (28), மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், 2013-ம் ஆண்டு மதுரையை சேர்ந்த செந்தில் குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்துள்ளார்.
இவர்களுக்கு 8 வயதில் மகன் இருக்கும் நிலையில், செந்தில்குமாரை பிரிந்து கேளம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். பின்னர் அவரிடமிருந்தும் பிரிந்து நான்காவதாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் நடராஜனுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது தெரியவந்தது.

ஆனால் அபிநயா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட செந்தில்குமாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நடராஜன் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற 17 சவரன் தங்க நகைகளை இரண்டாவது கணவர் செந்தில்குமாருடன் சேர்ந்து மதுரையில் உள்ள நகைக்கடையில் விற்று பணத்தை செலவு செய்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் மதுரை சேர்ந்த செந்தில்குமாரை கைது செய்த போலீசார் இருவரையும் தாம்பரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த அபிநயா, மேலும் பலருடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். அவரிடம் ஏமாந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகவும், ஆனால் தற்போது நடராஜன் மட்டும் புகார் செய்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைதான அபிநயாவிடம் இருந்து ரூ.1.36 லட்சம், எல்.இ.டி. டி.வி., 20 கிராம் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.