ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் 5 புதிய திட்டங்களுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று வரை 16.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
நடப்பாண்டில் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கும் உடனடியாக முன்பதிவு செய்ய வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் ரூ.15 கோடி மதிப்பில் அப்பம் மற்றும் அரவணை தயாரிப்பதற்கு தேவையான மாவு ஆலை அமைக்கப்பட உள்ளது.
குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க குன்னூர் அணையில் இருந்து சபரிமலைக்கு குழாய் பதிக்கும் திட்டம், பம்பை நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டுவது, நிலக்கல் அடிவாரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் புதிய பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது உள்பட 5 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
newstm.in