கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்ததும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை நான்கரை டாலர் உயர்ந்து, 100 டாலரை எட்டியது. இதையடுத்து, உலகம் முழுவதும் பெட்ரொலிய பொருட்களின் விலை உயர ஆரம்பித்தது.
அதன் பிறகு, கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 129 டாலர் அளவுக்கு உயர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வெகுவாக உயர்த்தப்பட்டது. இது, விலைவாசி உயர்வுக்கும் வழிவகுத்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கடந்த மே மாதம் 21-ம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசும் குறைத்தது. இதனால், சென்னையில் பெட்ரோல் ரூ.8.22 காசுகள் குறைந்து ரூ.102.63-காசுக்கும், டீசல் ரூ.6.70 குறைந்து ரூ.94.24 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை தற்போது சுமார் 50 டாலர்கள் குறைந்து, 76 டாலருக்கு விற்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் கடந்த 200 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாக நீடிக்கிறது.
இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையிலும் மத்திய அரசு பெட்ரோல், டீசலின் விலையை குறைக்காமல் இருப்பது பொதுமக்களை வஞ்சிக்கும் செயல் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், பெட்ரோல் – டீசல் விலை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி விளக்கமளித்துள்ளார். அதில், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததற்கு ஈடாக இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை உயர்த்தப்படவில்லை. எனவே, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.